ரூ.249 கோடி செலவில் கட்டப்பட்ட சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரத்தை திறந்து வைத்த முதலமைச்சர்!

சென்னை:
உலகம் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் நிதிநுட்ப துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நிதிநுட்ப துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 17.6.2023 அன்று சென்னை மாவட்டம் ஆலந்தூர் வட்டம் நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில், நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கும், அதில் முதற்கட்டமாக 5.56 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் என்ற அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிதிநுட்ப கோபுரக் கட்டடம் ரூ.249 கோடி செலவில் 2 அடித்தளங்கள், தரை மற்றும் 11 தளங்களுடன் 5.56 லட்சம் சதுர அடி பரப்பளவில், அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

நிதி மற்றும் நிதிநுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தொடங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள உயர்தர அலுவலக இடங்கள் நிதிநுட்ப கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

லீடு பிளாட்டினம் கிரீன் பில்டிங் தரத்துடன் உருவாக்கப்பட்ட இக்கட்டடம், வாகன நிறுத்த வசதிகள், 250 மற்றும் 50 இருக்கை வசதிகளைக் கொண்ட கூட்ட அரங்கங்கள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடம், குழந்தைகள் பராமரிப்பு மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

தடையற்ற வணிக சூழலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உலகத் தரத்திலான உள் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட இக்கட்டடம், தமிழ்நாட்டின் நிதிநுட்ப வளர்ச்சிக்கான முக்கிய மையமாக திகழும்.

இந்நிகழ்ச்சியின்போது பிரைம் போரெக்ஸ், சிம்ப்ட்ரா டெக்னாலஜிஸ், மிட்பின் வெல்த் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு நிதிநுட்ப கோபுரத்தில் அலுவலக இடங்கள் ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, எம்.எல்.ஏ.க்கள் கருணா நிதி, வரலட்சுமி மதுசூதனன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், டிட்கோ தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், டிட்கோ மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, டிட்கோ நிர்வாக இயக்குநர் சுவேதா சுமன், தொழில் மற்றும் நிதி துறையைச் சார்ந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *