கொச்சி:
ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் நியூஸிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
இந்திய அணியின் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் விளாசி அசத்தினார்.
இந்நிலையில் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த ஆடை தொழிலதிபரான நித்தின் பாபு என்பவர், சஞ்சு சாம்சனின் ஆட்டத்தால் உற்சாகம் அடைந்ததுடன் அதனை வித்தியாசமான முறையில் கொண்டாடி உள்ளார். அவரது உற்சாகம் விரைவில் தாராள மனப்பான்மையின் செயலாக மாறியது.
தனது இரண்டு துணிக்கடைகளில் பணிபுரியும் 82 ஊழியர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் பரிசு வழங்குவதாக அறிவித்தார். இந்த வகையில் அவர், மொத்தம் ரூ.1.64 லட்சம் வழங்கி உள்ளார்.
சஞ்சு சாம்சன் சூப்பர் 8 சுற்றில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 97 ரன்கள் விளாசிய போது நித்தின் பாபு தனது ஊழியர்கள் 62 பேருக்கு தலா ரூ.500 வழங்கி உள்ளார்.
மேலும் அரை இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக சாம்சன் 89 ரன்கள் அடித்த போது தனது ஊழியர்கள் 62 பேருக்கு தலா ரூ.1,000 என ரூ.62 ஆயிரம் வழங்கி உள்ளார்.