சிட்னி:
ஏஎஃப்சி மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய மகளிர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று சீன தைபே அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
இந்திய அணி தரப்பில் 39-வது நிமிடத்தில் மனிஷா கல்யான் கோல் அடித்தார். அதேவேளையில் 45+9-வது நிமிடத்தில் இந்திய அணியின் எலங்பம் பாந்தோய் சானு, சுய கோல் அடித்து ஏமாற்றம் அளித்தார்.
சீன தைபே அணி தரப்பில் 12-வது நிமிடத்தில் சு யு சன்னும், 77-வது நிமிடத்தில் யு ஷின் சென்னும் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.
இந்திய மகளிர் அணிக்கு இது ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வியட்நாம் அணியிடமும், 2-வது ஆட்டத்தில் ஜப்பான் அணியிடமும் தோல்வி அடைந்திருந்தது.
3 தோல்விகளின் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. சீன தைபே அணிக்கு எதிராக ஆட்டத்தின் பெரும் பகுதியைத் தனது கட்டுப் பாட்டில் வைத்திருந்தும், கோல் அடிப்பதற்கான பல வாய்ப்புகளையும் இந்திய அணி உருவாக்கியது.
ஆனால் ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் அந்த வாய்ப்புகளை கோல்களாக மாற்ற இந்திய அணி தவறியது.
முதல்முறையாக ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றிருந்த இந்திய அணி மோசமான செயல் திறன் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறி உள்ளது.