இன்று பதிவு செய்த இரண்டரை நாட்களிலேயே சிலிண்டர் வீடு தேடி வருகிறது; தடைகளைத் தாண்டி மக்கள் நலன் காப்பதே மோடிஜியின் பாணி!! தமிழிசை சவுந்தரராஜன் ….

சென்னை

‘‘கோவையில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் மயங்கி விழுந்தனர். கரூர் சம்பவத்துக்கு உடனடியாக அங்கு ஓடிச் சென்று அன்பில் மகேஸ் அழுதாரே. அவர் கோவைக்கு ஏன் செல்லவில்லை?’’ என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அமைந்தகரையில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விவகாரத்தில் ஒரு செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

இன்று உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் சிக்கல் நிலவுகிறது.

குறிப்பாக, சர்வதேச கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கப்பல்களுக்குப் பல்வேறு தடைகள் உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள் அந்தப் பாதையை கடக்க முடியாத சூழல் நிலவுகிறது.

ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான வெளியுறவுக் கொள்கையினால் இந்தியாவுக்குப் பாதிப்பில்லை.

நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் அரசுடன் நடத்திய தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் பலனாக, இந்திய தேசியக் கொடி ஏந்திய கப்பல்களுக்கு மட்டும் அந்தப் பாதையில் தடையற்ற அனுமதி கிடைத்துள்ளது. இது இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கிற்குச் சான்று.

40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. குறிப்பாக, ரஷ்யாவிடமிருந்து 45 சதவீதம் கூடுதல் கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்து இருப்பு வைத்துள்ளது. இது மோடிஜியின் தொலைநோக்கு பார்வை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள போதிலும், மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அந்த நஷ்டத்தை மத்திய அரசே ஏற்றுக் கொண்டு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது.

2012-ல் இதே போன்ற சூழல் வந்தபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெட்ரோல் விலையை 8 ரூபாய் உயர்த்திவிட்டு, “பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?” என்று கேட்டார். அதுதான் காங்கிரஸின் அணுகுமுறை.

இன்று சில காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் “எல்பிஜி எங்கே?” எனப் பதாகை ஏந்துகிறார்கள்.

அவர்களுக்குத் தெரிய வேண்டியது ஒன்றுதான். இன்று பதிவு செய்த இரண்டரை நாட்களிலேயே சிலிண்டர் வீடு தேடி வருகிறது. தடைகளைத் தாண்டி மக்கள் நலன் காப்பதே மோடிஜியின் பாணி.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. ஒரு தற்காலிக (பொறுப்பு) டிஜிபியை வைத்துக்கொண்டு, காவல்துறை தன் பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.

குற்றங்களின் எண்ணிக்கையை மறைப்பதற்காகப் புகார்களைப் பதிவு செய்யவே காவல் துறை மறுக்கிறது.

கோவையில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் மயங்கி விழுந்தனர். கரூர் சம்பவத்துக்கு உடனடியாக அங்கு ஓடிச்சென்று அன்பில் மகேஸ் அழுதாரே. அவர் கோவைக்கு ஏன் செல்லவில்லை?

அமைச்சர்கள் வெறும் அரசியல் நாடகங்களை நடத்துகிறார்களே தவிர, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இல்லை.

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க தவறிய திமுக அரசை கண்டித்து, 15-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ராகுல் காந்தி போன்ற ஒரு தலைவரை நாடு பார்த்ததில்லை.

மக்களுக்குப் பிரச்சனைகள் வர வேண்டும், அதன் மூலம் மோடி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி ‘வாக்கு பிச்சை’ எடுக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம். நாட்டின் நலனை விடத் தனது அரசியல் லாபமே அவருக்கு முக்கியமாகத் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *