ஈரான்-அமெரிக்கா போரால் திருப்பூரில் ஆடை விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு!!

திருப்பூர்;
சர்வதேச அளவிலான பேரிடர் மற்றும் போர்கள் நடக்கும் போது திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பது வழக்கம்.

தற்போது ஈரான்-அமெரிக்கா போர் சூழலால் சுற்றியுள்ள நாடுகளிலும் பாதிப்பு எதிரொலிக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் இறக்குமதி ஏற்றுமதி வர்த்தகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

ஏற்றுமதியாளர்கள் மட்டுமல்ல உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னலாடை தொழில் துறையில், ஜாப் ஒர்க் நிறுவனங்கள் முக்கிய பங்களிக்கின்றன. சாயம், கெமிக்கல், விறகு, நிலக்கரி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சாயமிடும் கட்டணம், நடைமுறை கட்டணத்தில் இருந்து ரூ. 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பேக்கிங் மற்றும் பிராசசிங் பிரிவுகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உயர்ந்துள்ளது. தையல் நூல் விலையும் உயர்ந்துள்ளது.

அதுமட்டுமல்ல, ரப்பர் மற்றும் பாலியஸ்டர் நூல் இறக்குமதி பாதிக்கப்பட்டு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக எலாஸ்டிக் உற்பத்தி கட்டணமும் உயர்த்த தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.

இப்படியாக ஜாப் ஓர்க் மற்றும் எலாஸ்டிக் என பல்வேறு பிரிவுகளிலும் உற்பத்தி கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒட்டுமொத்த பின்னலாடை உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு பின் ரம்ஜான் பண்டிகைக்கான ஆர்டர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தன. அவற்றை உற்பத்தி செய்து அனுப்பி வைத்து ள்ளனர். அடுத்தகட்டமாக 2ம் கட்ட கோடை கால ஆர்டர் மீதான உற்பத்திக்கு முழு வீச்சில் திருப்பூர் தயாராகி வந்தது.

ஆடை விலையை உயர்த்த திட்டம்

இந்நிலையில் போர் சூழல் காரணமாக பெட்ரோலிய பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் மூலப்பொருட்கள் விலை திடீரென உயர்ந்துள்ளது.

இதனால் ஜாப் ஒர்க் பிரிவுகளும் தற்காலிகமாக உற்பத்தி கட்டணத்தை உயர்த்தி உள்ளன. இது உற்பத்தியாளருக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. அவர்களும் உற்பத்தி கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் வர்த்தக நலன் கருதி பாதிப்பை சமாளிக்கும் அளவுக்கு 5 சதவீதம் வரை உற்பத்தி கட்டணத்தை உயர்த்தலாம் என உத்தேசித்துள்ளனர். இது தொடர்பாக உற்பத்தியாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *