புதுச்சேரி:
நாராயணசாமிக்கு சீட்டு மறுக்கப்பட்டிருப்பதால் காங்கிரஸ் மாநிலத்தலைவர் வைத்திலிங்கம் எம்பி வீட்டு முன்பு நாராயணசாமி ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாளான இன்று, இண்டியா கூட்டணியில் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நெட்டப்பாக்கம் தொகுதியில் காங்கிரஸ் தரப்பில் அன்பரசனுக்கு சீட்டு தரப்படுகிறது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே சீட்டுக்காக காத்திருந்தோர் கந்தப்பா வீதியிலுள்ள காங்கிரஸ் கட்சித்தலைவர் வைத்திலிங்கம் வீட்டு முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மேலும், வைத்திலிங்கம் ஆதரவாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
போலீஸார் அங்கிருந்தோரை அப்புறப்படுத்தினர். அதைத்தொடர்ந்து அவரது வீட்டை நாராயணசாமி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நெல்லித்தோப்பு தொகுதியில் ஓபிஎஸ் அணியிலிருந்து திமுகவுக்கு வந்த முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகருக்கு தர திமுக திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிட விரும்பி அந்த தொகுதியில் கட்சி பணியாற்றி வந்தார்.
கடந்த தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி இத்தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிடும் நோக்கில், கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் உரிய முடிவு எடுக்கப்பட்டு வருகிறது.
இச்சூழலில் நெல்லித்தோப்பில் திமுக போட்டியிட முடிவானதால், நாராயணசாமிக்கு சீட் இல்லை என்பதால் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் எம்பி வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். வைத்திலிங்கத்துக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.