சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மொத்தமாக மதுபானங்களை வாங்குவதை கட்டுப்படுத்தும் வகையில், பீர் மற்றும் சரக்கு பாட்டில் தனி நபருக்கு வழங்குவது தொடர்பான கட்டுப்பாடுகளை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நெருங்கும் தேர்தல் – மதுபானம் கட்டுப்பாடுகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 29 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது.
அதே நேரம் தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை போன்ற பணிகளுக்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தையும் தேர்தல் ஆணையம் களம் இறக்கியுள்ளது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் இருந்து கட்சி சார்பாக பிரச்சாரத்திற்கு வரும் தொண்டர்களுக்கு மொத்தமாக மதுபானங்கள் வாங்கி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை, டாஸ்மாக்கில் ஒரு நபருக்கு எவ்வளவு மதுபானம் விநியோகிக்க வேண்டும் என டாஸ்மாக் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒரு நபருக்கு எத்தனை மதுபாட்டில்
இதன் படி, 4.5 லிட்டர் வரை மதுபான விற்பனைக்கும், 7.8 லிட்டர் பீர் விற்பனைக்கும், அதிகபட்சமாக 9 லிட்டர் ஒயின் விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் அல்லது இறக்குமதி செய்யப்பட்ட மதுபானத்தை ஆறு முழு பாட்டில்கள் (750மிலி) வரையோ, அல்லது 12 அரை பாட்டில்கள் (375மிலி) அல்லது 24 கால் பாட்டில்கள் (180மிலி) வரையோ வாங்கலாம்.
அதேபோல், ஒரு நபருக்கு 12 பீர் பாட்டில்கள் (650மிலி) மட்டுமே விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 குவாட்டர் அல்லது 12 ஆஃப் அல்லது 6 புல் பாட்டில்கள் தனி நபருக்கு விற்பனை செய்து பில் வழங்க வேண்டும் அல்லது 12 பீர் பாட்டில் தனி நபருக்கு வழங்க வேண்டும்
மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்கனும்
நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களின்படி, வரம்பைக் கடைப்பிடிக்குமாறு அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் மாவட்ட மேலாளர்கள் சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
விற்பனையானது ஒரு முழுமையான கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு மூலம் கண்காணிக்கப்படுகிறது, ஒரே ரசீதில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறிய கட்டணங்கள் இருந்தால், அது குறித்துக் கண்டறியப்பட்டு, விசாரணை மற்றும் துறைசார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
ஊழியர்களுக்கு எச்சரிக்கை
மேலும் சில்லறை விற்பனைக் கடைகளில் அதற்கான இருப்பில் 50%-க்கும் அதிகமாக மதுபானங்களை இருப்பு வைப்பதற்கும், தனிநபர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்வதற்கும், சட்டவிரோதமாகவும் மற்றும் கடை செயல்படும் நேரத்திற்குப் பிறகும் மதுபானங்களைச் சேமித்து வைப்பதற்கும் மற்றும் விற்பனை செய்வதற்கும் எதிராக டாஸ்மாக் எச்சரித்துள்ளது.