திருவாரூர்:
சைவ சமயத்தின் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இத்தலத்தில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்வான ஆழித்தேரோட்டம் கடந்த 29-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிலையில், கோவிலின் மற்றுமொரு விசேஷ நிகழ்வான பாத தரிசனம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
பங்குனி உத்திர தினமான இன்று தியாகராஜர் தனது இடது பாதத்தை பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் திருவாரூர் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுமார் 2 கி.மீ தூரம் காத்திருந்து பாத தரிசனத்தை கண்டு மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை, மகா அபிஷேகம், நடராஜர் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.