சென்னை:
“தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்துக்கும், தமிழக மக்களுக்கும் இடையிலான தேர்தல் இது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் இபிஎஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “இது, தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்துக்கும், தமிழக மக்களுக்கும் இடையிலான தேர்தல்.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விசைத்தறி, கைத்தறி, விவசாயம் ஆகிய தொழிலகள் செழிக்கும்.
அதிமுகவுக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். அதிமுக கூட்டணி மிகவும் வலிமையான கூட்டணி.
அதிமுக ஆட்சியில் விவசாயிகள் நலன் காக்கப்பட்டது, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளர்கள் நலன் காக்கப்படும்.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்திலும் கணக்கெடுப்பு நடத்தப்படும். தற்போது ரேசன் கடைகளில் தரமில்லாத அரிசி வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
எங்கள் ஆட்சி அமைந்தவுடன் தரமான அரிசி வழங்கப்படும். திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.
கஞ்சா, போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. நாடு அழிவுப் பாதையில் சென்று கொண்டுள்ளது. குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்கு கூட பாதுகாப்பில்லை.
என் மீது இருக்கின்ற கோபத்தால், நான் கொண்டுவந்த திட்டங்களையெல்லாம் முடக்கி இருக்கிறார்கள்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா மினி கிளினிக் திட்டத்தை முடக்கினார்கள்.
ஸ்டாலின் குடும்பம் மட்டும்தான் வளமாக உள்ளது. திமுகவினர் எந்த கடைக்குச் சென்று சாப்பிட்டாலும் பணம் தருவதில்லை.
அதிமுக ஜனநாயகம் மிகுந்த கட்சி. விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது ஆனால் திமுக இது குறித்து யோசிப்பதில்லை. தற்போது மக்கள் வாழ முடியாத நிலை உள்ளது.
திமுக கொடுத்த வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை”. இவ்வாறு அவர் பேசினார்.