விருதுநகர்:
விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
விருதுநகர் அருகே கட்டணர்பட்டியல் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

பட்டாசு ஆலையில் நேற்று மீட்புப் பணியின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை பாஜக மாநில தலைவரும் சாத்தூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அடிக்கடி சாத்தூர், சிவகாசி பகுதிகளில் இது போன்ற வெடி விபத்துக்கள் நடந்து வருகின்றன.
இந்த விபத்துகளை தடுக்க எந்த அரசாக இருந்தாலும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும்.
அரசியல்வாதிகளின் பின்புலத்தால் தைரியமாக சட்டத்திற்கு புறம்பாக பட்டாசுகள் தயாரிக்கும் போது வெடி விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இது போன்ற விபத்துகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆலை உரிமையாளர்களும் தொழிலாளர்களும் விழிப்புடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும்.
இதில் யாரையும் குறை சொல்ல நான் விரும்பவில்லை. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், காயம் பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கும் மத்திய அரசின் கவனத்திற்கும் கண்டிப்பாக கொண்டு செல்வேன்,” என்று நயினார் கூறினார்.