சென்னை:
தேர்தல் பிரச்சாரத்தின்போது புறாவுக்கு தவெக வண்ணம் பூசப்பட்டு பறக்கவிடப்பட்ட விவகாரத்தில் கட்சியின் தலைவர் விஜய்க்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திருச்சியில் ஏப்.19-ம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, தவெக கட்சியின் வண்ணம் பூசப்பட்ட புறா பறக்கவிடப்பட்டது. இது தொடர்பாக பீட்டா இந்தியா அமைப்பு கட்சியின் தலைவர் விஜய்க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: சமீபத்தில் தவெக கட்சிப் பிரச்சாரத்தில் புறாவுக்கு வண்ணம் பூசப்பட்டு பறக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வண்ணம் பூசப்பட்ட புறா, இரைச்சலான மற்றும் கூட்ட நெரிசலான சூழலில் விடுவிக்கப்படுவது அந்தப் பறவைகளுக்குக் கடுமையான மன அழுத்தத்தையும், உடல் ரீதியான காயங்களையும், நீண்டகால பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.
பறவைகளின் இறகுகளில் பூசப்படும் பெயின்ட் அல்லது சாயங்கள், அவற்றின் வெப்ப ஒழுங்குமுறை மற்றும் பறக்கும் திறனைப் பாதிப்பதோடு, அவை தங்களைச் சுத்தம் செய்யும் போது அந்த நச்சுப் பொருட்களை உட்கொள்ளவும் வாய்ப்புள்ளது.
இந்தச் செயல் விலங்குகள் மீதான கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான விதிமீறலாகும்.
மேலும் இது தேர்தல் பிரச்சாரத்தின் போது விலங்குகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையை மீறுவதாகவும் உள்ளது.
இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, வண்ணம் பூசப்பட்டு பயன்படுத்தப்பட்ட அந்தப் பறவைகளை, உரிய சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்காக உடனடியாகப் பீட்டாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
தேர்தல் பிரச்சாரங்களில் விலங்குகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்யும் வகையில் ஓர் உறுதியான கொள்கையை வகுக்க வேண்டும்.
கட்சியின் தொண்டர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு விலங்குகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சட்டம் மற்றும் விலங்குகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தனது தலைமைத்துவத்தின் கீழ் இத்தகைய தவறான செயல்களைத் தடுத்து நிறுத்த விஜய் நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.