குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!

அகமதாபாத்:
ஐபிஎல் 2026 தொடரின் 42-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (ஏப்ரல் 30) நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த குஜராத் அணி, ஆரம்பம் முதலே பெங்களூரு வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தது.

விராட் கோலி (28) அதிரடியாகத் தொடங்கினாலும், ககிசோ ரபாடா அவரை விரைவில் வெளியேற்றினார்.

தேவ்தத் படிக்கல் (40) ஓரளவிற்குப் போராடிய நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் தரப்பில் அர்ஷத் கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் அதிரடியான அடித்தளம் அமைத்தார்.

வெறும் 18 பந்துகளில் 43 ரன்கள் (4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) விளாசிய அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

ஜோஸ் பட்லர் தனது பங்கிற்கு 39 ரன்கள் சேர்த்தார். பெங்களூரு தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முட்டுக்கட்டை போட்டாலும், அது வெற்றியைத் தடுக்கப் போதுமானதாக இல்லை.

நடுவரிசையில் சில விக்கெட்டுகள் சரிந்தபோது, ராகுல் தேவாட்டியா (27) மற்றும் ரஷித் கான் (7) ஜோடி நிதானமாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது.

15.5 ஓவர்களில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், பெங்களூரு அணி 2-வது இடத்திலேயே நீடிக்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *