தமிழகத்தில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்!!

சென்னை:
“தமிழகத்தில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்” என திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இந்த ஆண்டும் நீட் வினாத்தாள் கசிவு முறைகேடுகள் வெளியாகி, தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கிறது.

நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட் தேர்வு மோசடி இல்லை, நீட்டே ஒரு மோசடி தான்.

ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்பட வேண்டும்.

மீண்டும் நீட் தேர்வு நடத்துவதால் ஏற்படும் தாமதம், மாணவர்களின் உயர் கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால், பழையபடி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *