கரூர்:
கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்ட ராட்சத குழாய் உடைந்து குடிநீர் வீணானது.
கரூர் மாவட்டம் வெள்ளியணை கடை வீதியில் ஆஞ்சநேயர் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் இன்று (மே 14) காலை 6 மணி அளவில் உடைப்பு ஏற்பட்டது.
குடிநீர் வெளியேறி சாலையின் ஒரு பகுதியில் குளம் போல தேங்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் எதிர்புறம் வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக லட்சக்கணக்கான லிட்டர் குடி தண்ணீர் வெளியேறி வீணான நிலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் குடிநீர் உந்து (பம்ப்பிங்) நிலையத்திற்கு தகவல் அளித்து தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இப்பகுதியில் அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதால் முறையாக தரமான முறையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.