ஏழை எளிய, நடுத்தர மக்கள் மற்றும் குறு, சிறு தொழில் நிறுவனங்களைப் பாதிக்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – முதல்வர் விஜய் வலியுறுத்தல்!!

சென்னை:
‘ஏழை எளிய, நடுத்தர மக்கள் மற்றும் குறு, சிறு தொழில் நிறுவனங்களைப் பாதிக்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்’ என மத்திய அரசை தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒன்றிய அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருட்களின் விலையை, குறிப்பாக லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.3/- மற்றும் டீசல் ரூ.3/- என்ற அளவில் உயர்த்தியுள்ளன. இது ஏற்கத்தக்கதல்ல.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும்போது அதற்கேற்றவாறு பெட்ரோல் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையைக் குறைப்பதில்லை. மாறாக, லாபத்தினை மட்டும் அந்த நிறுவனங்கள் எடுத்துக்கொள்கின்றன.

ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலியப் பொருட்களின் இந்த விலை உயர்வு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

இந்த விலை உயர்வு இருசக்கர வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளைப் பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மாத வருமானத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும், வங்கிக் கடன்பெற்று வாகனங்களை வாடகைக்கு இயக்குபவர்கள் இதனால் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக்கப்பட்டு அவர்களுடைய பொருளாதாரமும் பாதிக்கப்படும்.

மேலும், இந்தப் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக வாடகை வாகனத்தின் வாடகை உயர்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

இது அன்றாடப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைவதுடன் ஏழை, எளிய மக்களின் வாங்கும் திறனையும் பாதிப்படையச் செய்யும்.

குறு சிறு தொழில் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் உற்பத்திச் செலவும் அதிகரிப்பதால், சந்தையிலும், ஏற்றுமதியிலும் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, ஏழை எளிய, நடுத்தர மக்கள் மற்றும் குறு சிறு தொழில் நிறுவனங்களைப் பாதிக்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *