கொல்கத்தா:
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியுடனான போட்டியின்போது கேட்ச்களை தவறவிட்டதால் தோல்வி கண்டோம் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்தார்.
கொல்கத்தா, குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் கொல்கத்தா அணி, 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. அஜிங்க்ய ரஹானே 14, ஃபின் ஆலன் 93, அங்ரிஷ் ரகுவன்ஷி 82, கேமரூன் கிரீன் 52 ரன்கள் குவித்தனர்.
பின்னர் விளையாடிய குஜராத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. சாய் சுதர்ஷன் 53, ஷுப்மன் கில் 85, நிஷாந்த் சிந்து 1, ஜாஸ் பட்லர் 57, ராகுல் டெவாட்டியா 2 ரன்கள் எடுத்தனர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் குஜராத் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும். ஆனால் தோல்வி அடைந்ததால் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) உடனான போட்டியை அந்த அணி எதிர்நோக்கியுள்ளது.
தோல்விக்குப் பின்னர் குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறியதாவது: இந்த ஆடுகளத்தில் 200 முதல் 210 ரன்கள் எடுத்தால் போதும் என்று நினைத்தோம்.
ஆனால், பீல்டிங்கின்போது நாங்கள் அதிகமான கேட்ச்களை தவறவிட்டோம். ஆடுகளம் நன்றாகவே இருந்தது.
யாரையும் தடுத்து நிறுத்துவது கடினம். மேலும் நாங்கள் பேட்டிங்கின்போது சிறப்பாகவே செயல்பட்டோம். அதேநேரத்தில், நாங்கள் இன்னும் சிறப்பாக ஃபீல்டிங் செய்திருக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.
நாங்கள் எளிதாக 4 கேட்ச்களைத் தவற விட்டுவிட்டோம். அதனால் வெற்றிக்குத் தகுதியான அணியாக எங்கள் அணி இல்லை. 4 கேட்ச்களை விட்டது தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது.
அந்த வகையில் சிறந்த அணியே குவாலிஃபையர் தகுதிச் சுற்றுக்குச் செல்லும். மீண்டும் அகமதாபாத்துக்குச் செல்கிறோம். சில நாட்கள் ஓய்வெடுத்த பின்னர் இதிலிருந்து நாங்கள் மீண்டு வருவோம் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.