”இயற்கை சீற்றங்களின் போது கேட்கப்படும் நிதியை முழுமையாக பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்குவதில்லை” – ஈபிஎஸ் குற்றச்சாட்டு!!

மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று மாலையுடன் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனால் பரப்புரையின் கடைசி நாளான இன்று அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சேலத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்; அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. திமுக அளித்த வாக்குறுதிகளில் 10%-க்கும் குறைவான அறிவிப்புகளை மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்து புதிய வரலாற்றுச் சாதனையை படைக்க வேண்டும்.

பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் எதையும், தமிழகத்திற்கு 10 ஆண்டுகளாக தரவில்லை. இயற்கை சீற்றங்களின் போது கேட்கப்படும் நிதியை முழுமையாக வழங்குவதில்லை.

பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரட்டை இலை மற்றும் முரசு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *