சென்னை:
தமிழகத்துக்கு பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.1,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் தற்போதைய திட்டங்களின் நிலை, பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: வருவாய்த் துறையில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இருமாதங்களில் துறை சார்பில் எந்தெந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம்.
குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சேவைகளை உடனுக்குடன் வழங்குவது பற்றி இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இணையதளம் மூலம் சான்றிதழ்களைப் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன.
இணையதளம் மூலம் விண்ணப்பித்தால் சான்றிதழ்களை 5 நாட்களுக்குள் வழங்க விஏஒ நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு நிலங்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை ஆய்வு செய்து, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை முடிவு செய்யவுள்ளோம்.
பத்திரப்பதிவில் இருக்கும் தேக்கங்களை சரிசெய்து, பட்டாக்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைச் சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை மாஞ்சோலையில் கூடுதலாக மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் பெரியளவில் மழை இல்லை. இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைவாக இருக்கிறது.பேரிடர் மேலாண்மை துறைக்கு தற்போது தேவைப்படும் ரூ.1,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
முதல்வர் பத்திரிகையாளர் களைச் சந்தித்து பதில் சொல்வதைவிட, மக்களுக்கு சொன்னதை செய்கிறோமா என்ற அடிப்படையில் செயல்பாடுகளைத்தான் முக்கியமாக நினைக்கிறார்.
இண்டியா கூட்டணியில் தவெக இடம்பெறுவது குறித்து முதல்வர் விஜய் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.