சென்னை:
“கடந்த திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை தொடர்பாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தவெக அரசின் வெள்ளை அறிக்கை, வெற்று அறிக்கையாகிவிட்டது என்றும், பூகம்பம் ஏற்படும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அது புஸ்வானம் ஆகிவிட்டது,” என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
கடந்த திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை தொடர்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தவெக அரசின் “வெள்ளை அறிக்கை” நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது.
முதல்வர் விஜய்யின் அரசு வெளியிடும் வெள்ளை அறிக்கை, அரசியல் பொருளாதாரத் தளத்தில் தமிழகத்தைத் தாண்டி பெரும் பூகம்பத்தைக் கிளப்பப்போகிறது என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்தார்கள்.
விஜய் மிகப்பெரிய அஸ்திரத்தைத் தூக்கிப்போட்டு வெடிக்கச் செய்யப்போகிறார் என்றே அனைவரது எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை.
தேர்தல் நேரத்தில் அனைத்துத் தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட ரூ.10 லட்சம் கோடி கடன் குற்றச்சாட்டையே, ‘பழைய ‘கள்’ புதிய மொந்தை’ என்பதைப் போல, பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிய கடனையும் சேர்த்து ரூ.13 லட்சம் கோடி கடன் என்பதை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வெள்ளை அறிக்கை வெளியிடும் முன் வெறும் புள்ளிவிவரங்களை மட்டும் சொன்னால் போதாது; அதற்கான அடிப்படை காரணங்களை யும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்; அதற்கான தீர்வுகளையும் தெள்ளத் தெளிவாக வெளியிட வேண்டும்.
2011 – 2021 வரையிலான அஇஅதிமுக ஆட்சியில் இருந்த ரூ. 5 லட்சம் கோடி கடனானது 2021 – 2026 திமுக ஆட்சியில் ரூ 10 லட்சம் கோடி யாக அதிகரித்ததற்கான காரணத்தை இந்த அரசு சுட்டிக் காண்பித்திருக்க வேண்டும் – ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
வெள்ளை அறிக்கை வெளியிடும்போது, அதை வெளியிடும் அரசுக்குத் தெளிவான பார்வையும் மனோதைரியமும் இருந்திடல் வேண்டும்.
ரூ.10 லட்சம் கோடி கடன் இருந்ததை அனைத்துத் தரப்பினரும் அறிவார்கள்; ஆனால், அதை வெள்ளை அறிக்கையாக வெறும் புள்ளிவிவரமாக மட்டும் நாம் இந்த அரசிடம் எதிர்பார்க்கவில்லை.
ரூ.5 லட்சம் கோடியாக இருந்த கடன், ஐந்தாண்டில் இரண்டு மடங்கு அதிகரிக்க உண்மையான காரணம் என்ன? அதிகமாகப் பெறப்பட்ட கடன் எந்தத் திட்டத்திற்காகச் செயல்படுத்தப்பட்டுள்ளது?
மக்களுக்குப் பயனளிக்கும் திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டதா அல்லது ஊதாரித்தனமான திட்டத்திற்குச் செலவிடப்பட்டதா?
அல்லது எந்தத் திட்டத்திற்கும் செலவழிக்காமல் கடன் பெற்று மிகப்பெரிய ஊழலோ அல்லது நிதி முறைகேடோ நடைபெற்றுள் ளதா என்பதைப் பற்றி இந்த அரசு விளக்கியிருந்தால், அது அறிவுப்பூர்வமான, ஆழமான வெள்ளை அறிக்கையாகக் கருதப்பட்டிருக்கும்.
ஏப்ரல் 23ஆம் தேதி வரையிலும் தனது தேர்தல் பரப்புரையில் மூலைமுடுக்கெல்லாம் கடந்த ஆட்சியைக் குற்றம் சுமத்திவிட்டு, மே மாதம் பத்தாம் தேதி பதவி ஏற்பு விழாவில் “கஜானா காலி” என்று அறிவித்துவிட்டு, அதை விடுத்து, “இது கடந்த கால அரசை குறை கூறும் நோக்கம் கொண்டது அல்ல.
மாறாக, மாநிலத்தின் நிதிநிலை குறித்த ஒரு பகுப்பாய்வு மட்டுமே. யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை” எனப் பூசி மெழுக வேண்டிய அவசியம் என்ன? திமுகவைக் கண்டு பயப்படும் இந்த அரசுக்கு எதற்கு இந்த வீண் வேலை?
தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை, குண்டுகற்கள் மற்றும் கருங்கல் ஜல்லி உள்ளிட்ட முக்கியமான கனிம வளங்கள் கொள்ளை; அதனால் ஏற்படும் வருவாய் இழப்பு போன்றவற்றைச் சரி செய்ய எவ்வழியும் சொல்லப்படவில்லை. அரசின் ஒவ்வொரு துறையிலும் ஊழல் மலிந்து கிடைக்கிறது.
மின்வாரியத்தில் டிரான்ஸ்பார்மர்கள் வாங்குவதிலும், போக்குவரத்துத் துறையிலும், அனைத்து மட்டங்களிலும் ஊழல்; பதிவுத்துறையிலும் ஊழல் மலிந்து அரசுக்கு வரவேண்டிய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் யார் யாருக்கோ போய்விட்டது.
அவற்றை அடியோடு ஒழித்து நிதி மேலாண்மை சரி செய்யப்படும் என்று இந்த அறிக்கையில் சொல்லவில்லை.
அதேபோன்று, மது போதைக்கு அடிமையாவதால் தமிழகத்தில் லட்சோபலட்சம் குடும்பங்கள் வறிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன; எண்ணற்ற இளம் விதவைகள் உருவாகின்றார்கள்.
எனவே, டாஸ்மாக்கிலிருந்து பல ஆயிரம் கோடிகள் வருமானம் வந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டோம்; தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று வெள்ளை அறிக்கையில் குறிப்பிடவில்லை.
ரூ.78,000 கோடி வரி வருவாய் பற்றாக்குறை என்று குறிப்பிட்டுவிட்டு, எவ்வாறு வரி வருவாயைப் பெருக்கப் போகிறார்கள் என்று தெளிவாக விளக்கவில்லை.
அனைத்து மகளிர்க்கும் தமிழ்நாட்டில் இலவசப் பேருந்து பயணம், மாதம் ரூ.2500, பட்டதாரிகளுக்கு ரூ.4000, ஆண்டுக்கு 6 சிலிண்டர், தாய்மாமன் சீர் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதித் திட்டங்களை நிறைவேற்ற நிதி எப்படி உருவாக்கப்படும் என்பதற்கு எவ்வித திட்டமும் இல்லை.
இந்த அறிக்கையால் யாருக்கும் எவ்விதத்திலும் பயனில்லை. தவெக அரசின் இந்த வெள்ளை அறிக்கை “வெற்று அறிக்கையாகி” உள்ளது.
தவெக அரசின் வெள்ளை அறிக்கை பெரும் பூகம்பத்தை உருவாக்கும் என்று எதிர்பார்த்தோம்; ஆனால், ‘புஸ்வாணம்’ ஆகிவிட்டது.
இவ்வாறு கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.