நாம் யாருடைய ‘பி’ டீமும் அல்ல, நாம் எப்போதும் தூய்மையான மக்களின் அணி – பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு!!

சென்னை:
“ஒன்றிய அரசு சார்ந்த கட்சியுடன் கொள்கை அளவில் நேரெதிராக நின்றாலும், எதெற்கெடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஒன்றிய அரசோடு மோதல் போக்கை விரும்புபவர்கள் நாம் அல்ல.

நமக்கு எப்போதும் தமிழகத்தின் வளர்ச்சி தான் முக்கியம். நாம் யாருடைய ‘பி’ டீமும் அல்ல, நாம் எப்போதும் தூய்மையான மக்களின் அணி.” என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், “நான் ஏதோ படப்பிடிப்பில் இருந்து நேராக வந்து முதல்வர் ஆனது போல எதிர்க்கட்சிகள் பேசுகின்றன.

1990-கள் முதல் பல வழிகளில் மக்களுக்கு துணையாக நின்றேன். எனது படங்களில் முடிந்த அளவு ஊழல் ஒழிப்பு, சமூக நீதி, கல்வி, அரசியல் பற்றி சொன்னோம்.

அதற்காக எனது படங்கள் சந்தித்த பிரச்சினைகள் அதிகம். மக்கள் நம்மை தெளிவாக புரிந்துகொண்டதால் இன்று ஆட்சியில் அமர்ந்துள்ளோம்.

நாம் ஆட்சிக்கு வந்து 40 நாட்களில் சிங்கப்பெண் அதிரடிப் படை, 200 யூனிட் இலவச மின்சாரம், குறுவை சாகுபடி தொகுப்பு, போதைப் பொருள் ஒழிப்புப் படை, 717 மதுபானக் கடைகள் மூடல், அம்மா உணவகங்கள் புதுப்பிப்பு, பத்திரப்பதிவுத்துறை பகல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களை செய்துள்ளோம்.

தமிழ்நாட்டின் கருவூலம் தேய்ந்து, ஓய்ந்து கிடக்கிறது. இப்படி ஒரு நிலையை உருவாக்கி வைத்துவிட்டு, நமக்கு ஆட்சி செய்ய தெரியாது என்கிறார்கள்.

எங்களுக்கு மக்கள் பணி மட்டும் செய்யத் தெரியும், மக்கள் பணத்தை சுரண்டத் தெரியாது.

தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தாலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகள், மின் சாதனங்கள், மின்மாற்றிகளில் ஏற்படும் பழுதாலும், வேண்டுமென்றே சிலரின் நடவடிக்கைகளுமே இந்த மின் வெட்டுக்கு காரணமாக உள்ளது.

ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை கொண்டவர்கள் தான் நாம்.

தற்போதைய ஒன்றிய அரசு சார்ந்த கட்சியுடன் கொள்கை அளவில் நேரெதிராக நின்றாலும், எதெற்கெடுத்தாலும் கண்ணை மூடிக் கொண்டு ஒன்றிய அரசோடு மோதல் போக்கை விரும்புபவர்கள் நாம் அல்ல. நமக்கு எப்போதும் தமிழகத்தின் வளர்ச்சி தான் முக்கியம்.

அதற்காக அரசியல் ரீதியான கொள்கைகளையும், மாநில உரிமைகளையும் எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

இதில் மக்களுக்கும், சிறுபான்மை சகோதரர்களுக்கும், ஆதரவு இயக்கங்களுக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

நாம் யாருடைய ‘பி’ டீமும் அல்ல, நாம் எப்போதும் தூய்மையான மக்களின் அணி. நீட் தேர்வு கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவது தான் நம் நிலைப்பாடு. சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் எதிர்க் கட்சிகள் அக்கறையோடு கேட்பதாக தெரியவில்லை.

சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் செய்வது அவதூறு அரசியல்.” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *