புதுடெல்லி:
இளம் வயதினர் இடையே நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு தனது முதன்மை திட்டமான ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்தய காரியக்ரம் (ஆர்பிஎஸ்கே) திட்டத்தை விரிவுபடுத்துகிறது.
இதன்மூலம் பிறப்பு முதல் 18 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் பரிசோதனை செய்து, வாழ்நாள் முழுவதும் இலவச சிகிச்சை வழங்க உள்ளது.
தேசிய பொது சுகாதார மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சகத்தால் ஒரு வழிகாட்டு ஆவணம் வெளியிடப்பட்டது.
இதில் குழந்தைப் பருவ நீரிழிவு நோய்க்கான பரிசோதனை, நோயறிதல், சிகிச்சை மற்றும் நீண்டகால மேலாண்மை ஆகியவற்றுக்காக ஒரு தேசிய கட்டமைப்பு வகுக்கப்பட்டுள்ளது.
இது, சமூகம் மற்றும் பள்ளி அளவிலான பரிசோதனைகளை மாவட்ட அளவிலான பராமரிப்புடன் ஒருங்கிணைத்து, நோயை முன்கூட்டியே கண்டறிவதையும் தொடர் சிகிச்சையை உறுதி செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த திட்டம், மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட ஆர்பிஎஸ்கே 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த வழிகாட்டுதல்கள், மோசமான உணவுப் பழக்கம், குறைந்து வரும் உடல் சார்ந்த செயல்பாடுகள், அதிக திரைப் பயன்பாடு உள்ளிட்ட அதிகரித்து வரும் வாழ்க்கை முறை அபாயங்களையும் சுட்டிக் காட்டு கின்றன.
மேலும், தொடர் சிகிச்சையை வலுப்படுத்த, டிஜிட்டல் முறையிலான கண்காணிப்பு கட்டமைக்கப்பட்ட பின்தொடர்தல் முறைகளையும் அறிமுகப்படுத்துகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் நடமாடும் சுகாதாரக் குழுக்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளை பரிசோதனை செய்யும்.