கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களை கட்டிவைத்து செருப்பால் தாக்கிய கொடூரம்!!

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் அருகே கெரூரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான்.

இவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது கிராமத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி உள்ளான்.

அப்போது 14 வயது சிறுவன் அடித்த பந்து அந்த வழியாக சென்ற ரேணுகா என்ற பெண் மீது விழுந்தது.

இதில் ஆத்திரம் அடைந்த ரேணுகா இதுகுறித்து உடனடியாக தனது உறவினர்களிடம் கூறினார். பின்னர் பள்ளி மைதானத்துக்கு ரேணுகா அவரது உறவினர்களான பசவராஜ் மற்றும் அபி ஆகிய 2 பேரையும் அழைத்து வந்துள்ளார்.

அவர்கள் 2 பேரும் பந்தை அடித்த சிறுவனை பிடித்தனர். மேலும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு சிறுவனையும் பிடித்து உள்ளனர்.

பின்னர் 2 சிறுவர்களையும், பள்ளியில் உள்ள ஒரு ஜன்னல் அருகே நிறுத்தி, அவர்களின் கைகளை கயிற்றால் கட்டி வைத்து உள்ளனர்.

மேலும் சிறுவர்கள் என்றும் பாராமல் ரேணுகா, பசவராஜ் மற்றும் அபி ஆகிய 3 பேரும் சேர்ந்து செருப்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து சிறுவர்கள் கதறி அழுவதை பார்த்த அவர்கள் மீண்டும் செருப்பு மற்றும் கைகளால் தாக்கியுள்ளனர்.

இதனை பார்த்த கிராமமக்கள் உடனடியாக தலையிட்டு சிறு வர்களை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிறுவர்கள் 2 பேரும் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள், உடனடியாக கெரூரா போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் ரேணுகா, பசவராஜ் மற்றும் அபி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

அதற்குள் அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால் தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *