90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி – ஆரவ் ,ரம்யா பாண்டியன் -கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்திருக்கும் ‘அருள்வான்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை ரம்யா பாண்டியன், ” இந்தப் படத்தின் கதையை கேட்பதற்கு முன் கிராமத்து கதைகளில் சிறிது நாட்கள் வரை நடிக்க வேண்டாம் என்ற மனநிலையில் தான் இருந்தேன்.
இருந்தாலும் இயக்குநருக்காக இந்த கதையை கேட்டேன். கதையை முழுவதுமாக கேட்ட பிறகு இந்த கதையில் நடிக்கலாம் என விரும்பினேன். ஏனெனில் இந்தப் படத்தின் கரு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
வரைபடத்திலேயே இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை, தொலை தொடர்பு வசதிகளே இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை, தூங்குவதற்கோ-சாப்பிடுவதற்கோ எந்த வசதிகளும் இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை இந்தப் படத்தில் தான் நாங்கள் பார்த்தோம்.
ஆனால் அப்படிப்பட்ட ஒரு இடத்தில் ஒரு ஜீவன் இருக்கிறது. அங்கு மக்கள் வாழ்கிறார்கள்.
அங்கு செல்வதற்கு கடினமானதாக இருந்தாலும் அங்கு சென்ற பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டதும், அங்குள்ள மக்களுடன் உரையாடியதும் மகிழ்ச்சியாக இருந்தது.
அவர்களுடன் பழகி வாழும் போது அதுவும் சுவாரசியமாகவே இருந்தது,” என்றார்.