சென்னை:
வனத்துறை வசம் உள்ள 100 டன் செம்மரம் ஏலம் கோரப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ.52.38 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செம்மரம் அதன் அரிய தன்மை, கடின அமைப்பு, உயர்ந்த சந்தை மதிப்பு காரணமாக உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இசைக் கருவிகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் சில பாரம்பரிய பயன்பாடுகளுக்காக இதற்கு வெளிநாடுகளில் நீண்ட காலமாக தேவை இருந்து வருகிறது.
இதன் காரணமாகவே செம்மரம் சட்டவிரோத வர்த்தகத்தில் அதிகம் இலக்காகியுள்ளது.
குளிர் அதிகம் உள்ள நாடுகள், இந்தியாவில் உள்ள குளிர் பிரதேசங்களில் இந்த மரங்கள் வளராது.
வட தமிழகம், தமிழக ஆந்திர எல்லை போன்ற மழை குறைவாக பெய்கிற, வறண்ட, வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டுமே செழிப்பாக வளர்கின்றன.
வனத்துறை தகவல்களின்படி, கடந்த சில ஆண்டுகளில் செம்மரக் கடத்தல் வழக்குகள், பறிமுதல்கள், கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
செம்மரத்துக்கு வெளிநாடுகளில் அதிக விலை கிடைப்பதால், கடத்தல் கும்பல்கள் கூலித் தொழிலாளர்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக மரங்களை வெட்டும் போக்கு உருவானது.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் சட்டப்பூர்வமாக கையகப்படுத்தப்பட்ட 100 டன் செம்மரங்களை திருப்பத்தூரில் உள்ள கிடங்கில் வனத்துறை வைத்துள்ளது. இதை வனத்துறையின் திருப்பத்தூர் வனக்கோட்டம் ஏலம் விட முடிவு செய்திருந்தது.
இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் இருந்து சமீபத்தில் பெற்றது. ஏலம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்.
சிண்டி கேட் அமைத்து ஒப்பந்ததாரர்கள் குறைந்த விலையில் ஏலம் எடுத்துவிடக் கூடாது.
அரசுக்கு அதிக வருவாய் வர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் ஏல நிறுவனமான எம்எஸ்டிசி (MSTC) மூலமாக தற்போது சர்வதேச அளவில் மின் ஏலம் விடப்பட்டுள்ளது.
இதில் குறைந்தபட்ச ஏலத்தொகையாக, இருப்பில் உள்ள 80 டன் ‘சி’ கிரேடு செம்மரம், ஒரு டன் 62,014 அமெரிக்க டாலராகவும் (ரூ.59,11,825), ‘சி’ கிரேடு அல்லாத 20 டன் செம்மரம், ஒரு டன் 26,679 டாலராகவும் (ரூ.25,43,322) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.52.38 கோடியாக உள்ளது. இதற்கு மேல்தான் இணைய வழியில் ஏலம் கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.