தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை வாக்கு எண்ணிக்கை மையங்கள் பாதுகாப்பாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் – தினகரன் வலியுறுத்தல்!!

தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை வாக்கு எண்ணிக்கை மையங்கள் பாதுகாப்பாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற அக்கல்லூரியின் முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதே போல, நீலகிரி மற்றும் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் அவ்வப்போது செயலிழப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

மத்திய பாதுகாப்புப்படை, மாநில ஆயுதப்படை மற்றும் காவல்துறையினர் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள், நபர் ஒருவர் அத்துமீறி நுழைய முயற்சிப்பதும், அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதும் பொதுமக்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, சிசிடிவி கேமிராக்கள் செயலிழப்பு போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *