‘மே தின’ நன்னாளில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான ‘மே தின’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உழைக்கும் தொழிலாளர் தோழர்கள், தங்களின் உரிமைகள் வென்றெடுத்ததைக் குறிக்கும் வண்ணம் கொண்டாடி மகிழும் ‘மே தின’ நன்னாளில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான ‘மே தின’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
“உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள், உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்” என்று உழைப்பாளர்களின் புகழை உயர்த்தி பாடியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். இந்தப் பாடல் வரிகள் மூலம், இந்த உலகம் உழைப்பவர்களாலே வாழ்கின்றது என்றும், அதனால் அது உழைப்பவர்களுக்கே சொந்தமானது என்றும், இத்தகைய பெருமை யையும், சிறப்பினையும் கொண்ட உழைப்பாளர்கள் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டாது, ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.“உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மன நிறைவை அளிக்கும்” என்று உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்தியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
“உங்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் கடின உழைப்பு ஒன்று மட்டுமே தீர்வாக அமையும்” என்று கூறினார் மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்கள்.இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த உழைப்பின் மேன்மையை உள்ளத்தில் பதிய வைத்து, அதன்மூலம் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த “மே தின’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.