My v3 ads நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என கோவை மாநகரக் காவல்துறை எச்சரிக்கை!!

My v3 ads நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என கோவை மாநகரக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கோவை மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், MyV3Ads என்ற நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்றப் பிரிவில் இவ்வாண்டு 2024 ஜனவரி மாதம் Prize Chits and Money Circulation Schemes (Banning) Act 1978, The Banning of unregulated deposit Schemes Act 2019ல் உள்ள சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வழக்கின் தன்மை காரணமாக, தற்போது வழக்கானது பொருளாதர குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு அத்துறையின் விசாரணையின் கீழ் உள்ளது.

மேலும், மேற்படி நிறுவனத்திற்கு ஹெர்பல் மற்றும் உணவப் பொருட்களை சப்ளை செய்த SIDVAA HERBAL AND FOODS என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்த S.V.விஜயராகவ் என்பவர் மீது போலியான முனைவர் படிப்புச்சான்றுடன் மேற்படி பொருள்களை தயாரிக்க உரிமம் பெற்றுள்ளதாக மோசடியில் ஈடுபட்டவர் மீது கோவை மாநகர குற்றப் பிரிவில் இவ்வாண்டு 2024 பிப்ரவரி மாதம் வழக்குத் தொடரப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

MyV3Ads என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அதற்கு ஹெர்பல் மற்றும் உணவு பொருட்களை அனுப்பிய நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சட்டப்படியான நடவடிக்கைகள் தவிர, MyV3Ads நிறுவனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட காரணங்களுக்காகவும் மற்றும் அந்நிறுவனத்தின் சார்பாக தனிநபரை மிரட்டியதாக வந்த புகார் மீதும் அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அந்நிறுவனத்தின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர்மீது கோவை மாநகரில் உள்ள சி2.பந்தயச் சாலை, 1.சிங்காநல்லூர் மற்றும் இ2. பீளமேடு ஆகிய காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலே கூறப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் புலன்விசாரணையில் உள்ளன.

இச்சந்தர்ப்பத்தில், மேலே கூறப்பட்டுள்ள குற்றவழக்கு பதிவு செய்யப்ட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயரிலும் அல்லது அந்நிறுவனத்தின் கிளை நிறுவனம் என்ற பெயரிலும் தனிநபர்கள் முதலீடுகள் செய்வதாகவும், அத்தகைய முதலீட்டை வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னரும் மேற்படி நிறுவனம் சட்ட விரோதமாக வசூலிப்பதாகவும் சமுக வளைத்தளங்களில் தகவல்களாக பரவுவதாக தெரிய நேரிடுகிறது.

பொதுமக்கள் அனைவரும் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள மேலே கூறியுள்ள நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்ற தகவல வந்தால் அது சட்டவிரோதமானது மற்றும் மோசடியானது என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

இதுபோன்ற செய்திகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் தங்களது கடும் உழைப்பில் ஈட்டிய பணத்தையும தங்களது சேமிப்பையும் எதிர்காலத் திட்டம் கருதி ஏதேனும் நிறுவனத்தில் அல்லது தொழிலில் முதலீடு செய்யும் நோக்கத்தில் இருக்கும பட்சத்தில், அத்தகைய தொழில் அல்லது நிறுவனங்கள் குறித்த விவரங்களை மத்திய, மாநில அரசுகளின் சம்மந்தப்பட்ட துறைகளால் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு செயல்படுமாறும், பொதுமக்களை பல்வேறு வகைகளில் ஏமாற்றும் வகையில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத, அரசு அறிவுறுத்தியுள்ள நெறிமுறைகளுக்கு திட்டங்களை அறிவித்து மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் குறித்து உள்ளுர் காவல்துறையினர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கைகள் அல்லது அறிவுரைகளை ஆகியவைகளை நன்கு தெரிந்து கொண்டு கவனமாகவும் விழிப்புணர்வுடனும் செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *