பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராகப் பதவியேற்றவுடன், பசுக்களை வெட்டுபவர்கள் தலைகீழாக தொங்க விடப்படுவார்கள் – அமித்ஷா!

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பீகார் மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமித் ஷா கூறியதாவது:-

காங்கிரஸ் போல வாக்கு வங்கியைக் கண்டு பாஜக பயப்படுவதில்லை. பிரதமர் மோடி அயோத்தியில் ராம் லல்லா கோயிலைக் கட்டியுள்ளார். இப்போது சீதா தேவி பிறந்த இடத்தில் ஒரு பெரிய கோவில் கட்டுவதுதான் மிச்சம் உள்ளது.

ராமர் கோவில் திறப்பு விழாவில் கூட பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தவர்களால் இதைச் செய்ய முடியாது. சீதையின் வாழ்க்கையைப் போல் யாரேனும் ஒரு கோவிலை கட்ட முடியும் என்றால் அது நரேந்திர மோடி மட்டும் தான், அது பாஜக தான்.

இன்று லாலு பிரசாத் யாதவ், அதிகார அரசியலுக்காக, தன் மகனை முதல்வராக்க, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் மதுபானி பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “மதுபானி பகுதியில் பசு வதை வழக்குகள் அதிக அளவில் பதிவாகி உள்ளன. மதுபானி அன்னை சீதையின் பூமி.

இந்த பகுதியில் பசு வதையை ஏற்க முடியாது. பாஜக அரசு பசு வதை அல்லது பசு கடத்தலை ஒருபோதும் அனுமதிக்காது.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராகப் பதவியேற்றவுடன், பசுக்களை வெட்டுபவர்கள் தலைகீழாக தொங்க விடப்படுவார்கள் என்பது மோடியின் உத்தரவாதம்” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார் அமித் ஷா.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *