2013ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ்நாட்டையே உலுக்கிய சம்பவம் அரங்கேறியது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவரான சுப்பையா கூலிப்படையினரால் சரமாரியாக வெட்டப்பட்டார்.
தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதுதொடர்பாக சுப்பையாவின் உறவினர் ஏ.ஏ.மோகன் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல் துறையினர், ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினந்தோறும் நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆதரவாக மூத்த வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ண லக்ஸ்மனராஜு, ரகுநாதன், சந்திரசேகர் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டன. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன.
சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தீவிர குற்றம் புரிந்தவர்களான பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு இரட்டை தூக்கு என்ற அடிப்படையில் கொலை வழக்கு மற்றும் கூட்டு சதி என்ற இரண்டு பிரிவுகளில் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்ரூவர் ஐயப்பனுக்கு தண்டனை கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.