20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா-கனடா நாளை மோதல்!!

லாடர்ஹில்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தான் மோதிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.

அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்தியா தனது 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நாளை கனடாவுடன் மோதுகிறது. இப்போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில் நடக்கிறது.

இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்திய அணி பேட்டிங்கில் ரிஷப் பண்ட், சூர்ய குமார் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலி இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் பார்முக்கு திரும்ப வேண்டியது மிகவும் முக்கியம்.

ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா அசத்தி வருகிறார். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

கனடா 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று 2 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியின் அடுத்த சுற்று ஏறக்குறைய முடிந்து விட்டது. அந்த அணியில் ஆரோன் ஜான்சன், கிர்ன், கார்டன், பர்கத்சிங், கலீம் சானா ஆகிய வீரர்கள் உள்ளனர்.

லாடர்ஹில்லில் மழை பெய்து வருகிறது. இதனால் இப்போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே இந்திய அணியுடன் மாற்று வீரர்களாக சென்ற சுப்மன்கில், அவேஷ்கான் ஆகியோர் நாடு திரும்ப உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதே வேளையில் மற்ற மாற்று வீரர்களான ரிங்குசிங், கலீல் அகமது ஆகியோர் அணியுடன் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவுக்கு எதிராக நாளைய போட்டி முடிந்தவுடன் சுப்மன்கில், அவேஷ்கான், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்புகிறார்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *