சட்டப்பேரவை நிகழ்வை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை 2வது நாள் கூட்டம் தொடங்கியது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அதிமுக உட்பட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிடப்பட்டது. அதிமுக, பாமக உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து வருகை புரிந்தனர்.
இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக உறுப்பினர் அனைவரும் இருக்கையில் அமருமாறு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்த நிலையில் சபாநாகர் அப்பாவுவின் எச்சரிக்கை மீறி அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளியேற்றப்பட்டு, இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க விதித்த தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் சபாநாயகர் அப்பாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்த நிலையில் சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார்.
இந்நிலையில் மக்களின் பிரச்சினைகளை பேசத்தான் எதிர்க்கட்சி. அது எங்களது கடமை . 2023ல் நடந்த சம்பவத்தில் இருந்து தமிழக அரசு பாடம் கற்கவில்லை. மீண்டும் நடந்துள்ளது. வரும் 24ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் . ஆர்.பி உதயக்குமாரை அலேக்காக தூக்கி போட்டுட்டாங்க… இது ஹிட்லர் ஆட்சி போல உள்ளது..
முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியதுடன் அவை நிகழ்வை புறக்கணிப்பதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் இருந்து புறப்பட்டார்.