உண்மையையும் பொறுப்புணர்வையும் நிலைநிறுத்தும் ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 16ம் தேதி தேசிய பத்திரிக்கை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தேசிய பத்திரிக்கை தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய பத்திரிக்கை தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பத்திரிகையாளர்கள் தினமான இன்று, உண்மையையும் பொறுப்புணர்வையும் நிலைநிறுத்தும் ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்.
அதிகரித்து வரும் சகிப்பின்மைக்கு மத்தியில், பத்திரிகையாளர்களின் தைரியம், ஜனநாயகத்தின் கடைசி பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம் என குறிப்பிட்டுள்ளார்.