ஃபெஞ்சல் புயலால் வரலாறு காணாத மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்து இரண்டு நாட்களாகியும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் வடியவில்லை.
இதனால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இருவேல்பட்டு பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வுக்கு சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் ஆவேசமாக இருந்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது.
அவருடன் ஆய்வுக்கு சென்ற கௌதம சிகாமணி, ஆட்சியர் உள்ளிட்டோர் மீதும் சேற்றை வீசியதால் பாதியில் புறப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.