திமுகவினரையும் குற்றச்சம் பவங்களையும் பிரிக்கவே முடியாது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது – டிடிவி தினகரன்…..

திமுகவினரையும் குற்றச்சம்பவங்களையும் பிரிக்கவே முடியாது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளாகவே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன் என்பவர் திமுகவைச் சேர்ந்தவர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஏற்கனவே பலமுறை மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகாருக்குள்ளான ஞானசேகரன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததும், 15க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அவரை முறையாக காவல்துறை கண்காணிக்கத் தவறியதே மீண்டும் மீண்டும் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் தொடங்கி, அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல், அரசியல் பிரமுகர்கள் கொலை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் என தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் திமுகவினரின் தலையீடு இல்லாமல் நடக்காது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் அண்ணா பல்கலைகழக விடுதியில் தங்கி பயின்று வரும் சூழலில், அந்த வளாகத்தில் குறைந்தபட்ச சிசிடிவி கேமராக்கள் கூட இயங்காமல் பழுதடைந்த நிலையில் இருந்திருப்பது மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருப்பதோடு, பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் உயர்கல்வித்துறையின் அலட்சியப்போக்கையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

எனவே, பலமான பாதுகாப்பு வளையம் கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் வெளிநபர் நுழைந்தது எப்படி ? இதற்கு முன் எத்தனை மாணவிகளை வீடியோ பதிவு செய்து இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார் ?

கைது செய்யப்பட்ட ஞானசேகரின் கூட்டாளிகள் யார் ? யார் உதவியோடு இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் ? என்ற கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி இந்த குற்றச்சம்பவத்திற்கு காரணமான அனைவரின் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *