சென்னை:
‘விலங்கு’ எனும் இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
படத்தொகுப்பு பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஜி. துரை ராஜ் கவனிக்கிறார். தாய் மாமன் உறவைப் பற்றி மண் மணம் கமழும் படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகி வருகிறது.
அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக ‘மாமன்’ உருவாகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று மாமன் படப்பிடிப்பு தளத்திற்கு சர்பிரைஸ் விசிட் அடித்து சூரி மற்றும் மாமன் படக்குழுவினர் சந்தித்து சிறிது நேரம் செலவிட்டுள்ளார்.
இதன் வீடியோவை படக்குழு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.