மும்பை:
ஐ.பி.எல். தொடரின் 56வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.
ரிக்கெல்டன் 2 ரன்னிலும், ரோகித் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
3வது விக்கெட்டுக்கு வில் ஜாக்ஸ்-சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக ஆடிய வில் ஜாக்ஸ் அரை சதம் விளாசினார்.
இந்த ஜோடி 71 ரன்கள் சேர்த்த நிலையில், சூர்யகுமார் யாதவ் 35 ரன்னில் அவுட்டானார். வில் ஜாக்ஸ் 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
குஜராத் சார்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றவர்கள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. சாய் சுதர்சன் 5 ரன்னில் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்த நிலையில் பட்லர் 30 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து கில்லுடன் ரதர்போர்டு ஜோடி சேர்ந்தார்.
ரதர்போர்டு அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். 14 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் சிறிது தடைபட்டது.
மழை நின்று ஆட்டம் தொடங்கிய நிலையில் சுப்மன் கில், ரதர்போர்டு, ஷாருக் கான், ரஷீத் கான் விக்கெட்டுகள் வீழ்ந்தன. மழை மீண்டும் பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஒரு ஓவரில்15 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இறுதியில், குஜராத் அணி வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. 8வது வெற்றியைப் பதிவு செய்துள்ள குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
மும்பை அணியின் தொடர் வெற்றிக்கு குஜராத் அணி முற்றுப்புள்ளி வைத்தது. மும்பை அணியின் 5வது தோல்வி இதுவாகும்.