சென்னை:
ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 73 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதன்மூலம் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 25+ ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் பவுமாவின் (13 முறை) சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 583 ரன்கள் குவித்து ஆரஞ் தொப்பிக்கான பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.