கரூர் சம்பவம் தொடர்பாக ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சி களைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன – ப.சிதம்பரம்

சென்னை:
கரூர் சம்பவம் தொடர்பாக ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் நடந்த துயர நிகழ்வில் 41 பேர் இறந்திருக்கிறார்கள். அதில் 17 ஆண்கள், 15 பெண்கள், 9 குழந்தைகள் என்பது நெஞ்சை உலுக்குகிறது. பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இறந்தவர்களுக்கு என் அஞ்சலி. அவர்கள் குடும்பத்தினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.

கரூரில் நடந்த துயர நிகழ்வு பற்றித் தமிநாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையே காங்கிரஸ் கட்சியின் கருத்து.

அதுவே என்னுடைய கருத்து. ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது.

எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனையைத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் தெரிவித்திருக்கிறேன்.

அது யோசனைதான். இது போன்று பலர் ஆக்கபூர்வமான யோசனைகளைத் தெரிவித்திருப்பார்கள்.

எல்லா யோசனைகளையும் பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அந்த முடிவுகளுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் பொது வெளி நிகழ்ச்சிகள் நடத்துபவர்களும் கீழ்ப்படிந்து நடந்து கொள்ள வேண்டும்.

கரூர் நிகழ்வைப் போன்று துயர சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க எல்லோரும் கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *