திண்டுக்கல்
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் பல்வேறு திருவிழாக்களில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா முக்கியமான தாகும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை திருவிழா வருகிற 27-ந் தேதி சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
விழாவை முன்னிட்டு தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறும். டிசம்பர் 2-ந் தேதி மலைக்கோவிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும்.
டிசம்பர் 3-ந் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
அன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மலைக்கோவிலில் 4 மூலைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதன்பின் சரியாக மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்படும். இதே போல் பழனி கோவிலின் உபகோவில்களான திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன், பூம்பாறை முருகன் கோவில்களிலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.