27-ந்தேதி தொடக்கம் -பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா!!

திண்டுக்கல்
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் பல்வேறு திருவிழாக்களில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா முக்கியமான தாகும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை திருவிழா வருகிற 27-ந் தேதி சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

விழாவை முன்னிட்டு தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறும். டிசம்பர் 2-ந் தேதி மலைக்கோவிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும்.

டிசம்பர் 3-ந் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

அன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மலைக்கோவிலில் 4 மூலைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

அதன்பின் சரியாக மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்படும். இதே போல் பழனி கோவிலின் உபகோவில்களான திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன், பூம்பாறை முருகன் கோவில்களிலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *