சென்னை:
வார்டு பணியாளர் பணி என்பது மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இணையானது என்று ஸ்ரீராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை அறங்காவலர் சம்யுக்தா வெங்கடாசலம் தெரிவித்தார்.
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பச்சிளம் குழந்தைகள் நலவார்டு பணியாளர்கள் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பாக தேறிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர் ஸ்ரீராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை அறங்காவலர் சம்யுக்தா வெங்கடாசலம் பேசுகையில், ‘‘தங்களுக்கு கிடைத்திருக்கும் சிறப்பான பயிற்சிகள் மூலம் வார்டு பணியாளர்கள், நம்பிக்கையோடு வரும் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதில் பங்கு பெற முடியும்.
அவர்களுடைய பணி என்பது மருத்துவர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இணையானது” என்றார். மருத்துவக் கல்லூரி தலைவர் மருத்துவர் கே.பாலாஜி சிங், ‘‘ஸ்ரீராமச்சந்திராவில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கான ஒரு வருட வார்டு பணியாளர் படிப்பு இலவசமாக வழங்கப்படுவதோடு, உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு பிரபல மருத்துவமனையில் உடனடியாக வேலை கிடைக்கிறது. இவர்களுக்கு மருத்துவ சாதனங்களையும், கருவிகளையும் உபயோகிக்கும் முறைகள் மற்றும் பொதுவான வியாதிகளின் சிகிச்சை முறைகள் கற்பிக்கப்படுகின்றன” என்றார்.
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மருத்துவர் உமாசேகர், “வார்டு பணியாளர் படிப்பு படித்தவர்களுக்கு, சிறப்பு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதியோர் மற்றும் நோயாளிகளின் வீடுகளில் 3 மாதக் கல்வி அளிக்கப்படும்” என்றார்.
இவ்விழாவில், கல்வித்துறை ஆலோசகர் மருத்துவர் கே.வி.சோமசுந்தரம், இணை துணைவேந்தர் மருத்துவர் மகேஷ் வக்கமுடி, பதிவாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார், மருத்துவ மைய இயக்குநர் மருத்துவர் ஆர்.பி.சுதாகர் சிங், துணை மருத்துவ அறிவியல் படிப்புத் துறை தலைவர் மருத்துவர் டி.வி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.