திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த 24-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
கோவிலில் வழக்கம் போல் பத்மநாபசாமிக்கும், கிருஷ்ண சாமிக்கும் 2 கொடிகள் ஏற்றப்பட்டது.
கோவில் தந்திரி தரண நல்லூர் சதீசன் நம்பூதிரி கொடிகளை ஏற்றி வைத்தார். விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
விழாவில் இன்று (புதன்கிழமை) இரவு 9 மணிக்கு பள்ளி வேட்டை நடைபெறுகிறது. நாளை (2-ந்தேதி) சங்கு முகம் கடற்கரையில் சாமிக்கு ஆராட்டு நடைபெறும்.
ஆராட்டு ஊர்வலத்தையொட்டி நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமான நிலைய ஓடு பாதை மூடப்படும். இந்த 5 மணிநேரம் விமான சேவை ரத்து செய்யப்படும்.
சாமி ஊர்வலம் விமான ஓடுபாதையை கடந்து செல்லும்போது, முறையாக, அனுமதி பாஸ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
அதேபோல் புகைப்படம் எடுக்கவும், செல்போன், கேமரா, பிளாஸ்டிக் பொருட்கள், பைகள், குடை உட்பட பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று பத்மநாபசாமி கோவில் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.