திருச்சி:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மழவனூரில் உள்ள ஒரு வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அதிகளவில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து லால்குடி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு மழவனூரில் உள்ள நீலமேகம் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் இருப்பது தெரியவந்தது. அந்தப் பணம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்பதால் வருமானவரித்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக அங்கு வந்த வருமான வரித்துறையினர் ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
அந்தப் பணத்துக்கு எவ்வித ஆவணங்களும் இல்லாததால் நீலமேகம், அவரது மகன் அரவிந்த் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் பணத்தை பதுக்கி வைத்திருந்த நீலமேகம், லால்குடி தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.