சென்னை;
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தனது கட்சியான சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதியை அறிவிக்க இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், யார் எந்தக் கூட்டணியில் சேருவார்கள், அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், சமத்துவ மக்கள் கட்சி, அமமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஐஜேகே கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், பிற கட்சிகளும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை பாஜக மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். வருங்கால இளைஞர்களின் நன்மைக்காகவும், தேச நலனுக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சரத்குமாரை தமிழ்நாட்டில் அடைத்து வைக்க பாஜக விரும்பவில்லை என்றும், தேசிய அரசியலுக்கு அவர் தேவைப்படுவதாகவும் கூறினார்.
கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமாருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்போ அல்லது பாஜகவில் முக்கிய பதவியோ வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.