ஒட்டுமொத்த இந்தியாவும் எனக்கு உள்ளூர்தான்; இந்தியா முழுவதும் நான் விளையாடுகிறேன் – ஷமி….

ஹைதராபாத்:
“நான் மெஷின் அல்ல. எனது கிரிக்கெட் சீசன் சார்ந்த செயல்பாட்டில் ஏற்றம், இறக்கம் இருக்கும்” என எல்எஸ்ஜி அணியின் பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் விளையாடின.

இதில் எல்எஸ்ஜி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ஷமி வென்றார். 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார்.

35 வயதான ஷமி, கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் இந்திய அணி விளையாடிய சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இருப்பினும் மனம் தளராத அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சூழலில் நடப்பு சீசனில் 2 ஆட்டங்களில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

இதில் அதிரடி வீரர்கள் அதிகம் நிறைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 4 ஓவர்களில் 18 பந்துகள் ரன் ஏதும் கொடுக்காமல் அவர் வீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்துக்கு பிறகு அவர் கூறியதாவது: “நான் மெஷின் அல்ல. எனது கிரிக்கெட் சீசன்களில் ஏற்றம், இறக்கம் இருக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளேன். மக்கள் என்னை கவனிக்கவில்லை என்பது வேறு கதை. இருந்தாலும் சிறப்பாக செயல்பட நான் முயற்சி செய்துள்ளேன்.

நமது பயிற்சி மற்றும் தயாரிப்பு சார்ந்துதான் நாம் டாட் பந்துகள் வீச முடியும். நாம் வீசுகின்ற லைன் மற்றும் ஃப்ளோ முக்கியம். நான் அதைத்தான் செய்தேன்.

ஹைதராபாத் அணிக்கு எதிராக பந்தின் வேகத்தை குறைத்து வீசினேன். அது நல்ல பலன் தந்தது.

புதிய பந்தில் பந்து வீசுவதுதான் எனது பலம். நமக்கான சிறந்த நாளில் மூன்று ஓவர்களை தொடர்ந்து வீசலாம். அது பலன் தந்தால் நான்காவது ஓவரையும் அதையடுத்து வீசலாம்.

ஒட்டுமொத்த இந்தியாவும் எனக்கு உள்ளூர்தான். இந்தியா முழுவதும் நான் விளையாடுகிறேன்.

இங்குள்ள விக்கெட்டுகள் மற்றும் களச் சூழல், அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து அனைவரும் அறிவோம். வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *