சென்னை:
முதல்வரின் திறன் பற்றியும், 2ஜி வழக்கு பற்றியும் ஆ.ராசா ஒரு ஆடியோவில் பேசியுள்ளது எங்களுடைய பிரச்சாரத்துக்கு இன்னும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது என தமிழக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர் மு.போஜராஜனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அண்ணாமலை நேற்று காலை கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார்.
தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் அவர் வந்து இறங்கியதும், அங்கு தயாராக நின்ற தேர்தல் பறக்கும் படையினர், ஹெலிகாப்டரை சோதனையிட்டனர்.
பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஊட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த முறை சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதன் பிறகு ஐந்து ஆண்டு காலம் மிக கடுமையாக உழைத்திருக்கிறோம்.
அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் எல்லாம் முழு ஒத்துழைப்பை நல்கி, இந்த முறை நிச்சயமாக ஊட்டியில் போஜராஜனுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறோம்.
காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு முறை இங்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தனர். ஆனால், எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்யவில்லை.
புதுச்சேரியில் 91 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது. அசாமிலும் மிக அதிகமான வாக்குப்பதிவு.
காரணம் எஸ்ஐஆர் மூலமாக போலி வாக்குகள் நீக்கப்பட்டிருப்பது இயற்கையாகவே வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
மே 4-ம் தேதிக்கு பிறகு பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்கும்போது தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சியான சூழல் உருவாகும்.
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமான் களத்தில் இருந்தாலும், தேர்தல் என்று வந்துவிட்டால் அது இருமுனைப் போட்டியாகத்தான் இருக்கும். ஒன்று ஆளும் திமுக, மற்றொன்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி கருத்தை தவறான ஒரு சூழலில் பேசுகிறார். கனிமொழி எங்களை யாராவது எதிர்த்துப் பேசினால் ‘மலர் வளையம்’ வைப்போம் என்று கூறுகிறார்.
இது மிரட்டல் இல்லையா? மேலும், நட்சத்திரப் பேச்சாளராக இருக்கும் ஆ.ராசா இதுவரை திமுகவின் ஒரு கூட்டத்தில் கூட பங்கேற்கவில்லை.
ஒரு ஆடியோவில் அவர் முதல்வரின் திறன் பற்றியும், 2ஜி வழக்கு பற்றியும் ஆ.ராசா பேசியுள்ளது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.
இது எங்களுடைய பிரச்சாரத்துக்கு இன்னும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.