சென்னை:
அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை பொதுமக்கள் இல்லங்களுக்கே சென்று வழங்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்னும் புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று கடலூர் சிதம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் உள்ள 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைகளின் 43 சேவைகளும் ஒவ்வொரு பகுதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டு வழங்கப்பட உள்ளன. இதற்காக நவம்பர் மாதம் வரை மாநிலம் முழுவதும் மொத்தம் 10,000 முகாம்கள் நடத்தபடுகின்றன.
அதன்படி, நகர்புற பகுதியளில் 3,768 முகாம்களும், ஊரக பகுதிகளில் 6,232 முகாம்களும் நடத்தப்படுகின்றன.
முதல்கட்டமாக இன்று (ஜூலை 15) தொடங்கும் இந்த முகாம்கள் ஆகஸ்ட் 15ம் தேதி வரை வெவ்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளன. இந்த முகாம்கள் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களிலேயே இரண்டாம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமை பெறுவதற்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
தகுதியுடைய மற்றும் விடுபட்ட பெண்கள் இந்த முகாம்களுக்குச் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாதிச் சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம், ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்வது உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.