புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட ஐந்து நாடுகள் பயணத்தின் போது 57 முக்கிய முடிவுகள் எட்டப்பட்டதாகவும், இவை இந்தியாவின் எதிர்காலத்துக்கு பெரும் பயன்களைத் தரக்கூடியவை என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு 5 நாள் பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், “பிரதமரின் ஐந்து நாடுகளை உள்ளடக்கிய பயணத்தின்போது, இந்தியா அனைவரின் கவன மையமாக திகழ்ந்தது.
பிரதமர் மோடிக்கு ஐந்து நாடுகளிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் அவரை பெருமைப்படுத்தினர். இந்தியாவும், பிரதமர் மோடியும் மூன்று சர்வதேச கவுரவங்களைப் பெற்றனர்.
ஐந்து நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து நாடுகள் பயணத்தின் மூலம், இன்றைய நிலையில் இந்தியா உலக அரங்கில் உறுதியாக நிலைத்து நிற்கிறது என்ற தெளிவான செய்தி உலக்கு உணர்த்தப்பட்டுள்ளது.
உலகம் மிகுந்த மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் இந்தியாவை நோக்குகிறது.
பிரதமர் மோடியின் தலைமையை இந்திய மக்கள் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இன்று, ஒட்டுமொத்த உலகமும் அவரது தலைமைத்துவத்தை மரியாதை, நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுடன் உற்று நோக்குகிறது.
இது வெறும் சர்வதேச ராஜதந்திர, அரசியல் பயணம் மட்டுமல்ல. இது இந்தியாவின் எதிர்காலத்துக்குப் பெரும் பயன்களை ஈட்டித் தந்துள்ளது.
இந்த பயணத்தின் மூலம் எட்டப்பட்ட 57 முக்கிய முடிவுகள், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி, உத்திகள், பொருளாதாரப் பயணம், திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், தற்சார்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றை வடிவமைக்க இருக்கின்றன.
ஐந்து நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஐந்து நாள் பயணம் நமது ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் வாய்ப்புகளை உருவாக்கவும், இந்தியாவில் பெருமளவிலான முதலீடுகளை ஈர்க்கவும் ஒரு உந்து சக்தியாக அமையும்.
ஐரோப்பாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று துணையாக நின்று பயனடையும் நட்பு நாடுகளைப் போன்றவை. நமக்கு இடையே போட்டி குறைவு.
கூட்டாண்மைதான் அதிகம். இந்த நாடுகள் இந்தியாவை ஒரு நிலையான, நம்பகமான சக்தியாகவே நோக்குகின்றன” என தெரிவித்துள்ளார்.