சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று (வெள்ளிக்கிழமை) மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மாநில அளவிலான 5-வது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
இந்தக் கூட்டத்தில், தீன்தயாள் அந்தியோ தயா யோஜனா, தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் கிரிஷி சிஞ்சாயி திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
முத்தமிழறிஞர் கலைஞரால் 1989-ம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட சுய உதவிக் குழு, இயக்கமாகி இன்று இந்தியாவிற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஒன்றிய அரசின் “தீன்தயாள் அந்தியோதயா யோஜனா தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்” ஒன்றிய மற்றும் மாநில அரசின் 60:40 என்ற நிதிப்பங்களிப்பின் அடிப்படையில் முதல் 37 ஊரக மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களில் 3.38 லட்சம் சுய உதவிக் குழுக்களும், நகர்ப்புறங்களில் 1.41 லட்சம் சுய உதவிக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களில் 55.12 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இந்தத் திட்டத்தின் கீழ், 45,312 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதியாக 67 கோடியே 97 லட்சம் ரூபாயும், சமுதாய முதலீட்டு நிதியாக 75,127 சுய உதவிக் குழுக்களுக்கு 801 கோடியே 62 லட்சம் ரூபாயும், நலிவு நிலைக்குறைப்பு நிதியாக 13,546 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு 75 கோடியே 73 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பழங்குடியினரைக் கொண்டு 25,001 சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,57,316 நபர்கள் பயன் அடைந்துள்ளனர்.
இவற்றில் 17,207 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு 25 கோடியே 81 லட்சம் ரூபாய் சிறப்பு சுழல்நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுக்களின் தடையற்ற செயல்பாடுகளுக்காக நமது அரசு பொறுப்பேற்ற பிறகு இன்று வரை மகளிர் சுய உதவுக் குழு உறுப்பினர்களுக்கு 1 லட்சத்து 25 ஆயிரத்து 362 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டு உள்ளது என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
2025-2026-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, மகளிருக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 3-9-2025 வரை 1,46,100 சுய உதவிக் குழுக்களுக்கு 13 ஆயிரத்து 62 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
உலக மகளிர் நாள் விழா 2025-ல் நான் கலந்து கொண்டு சுய உதவிக் குழு மகளிருக்கு அடையாள அட்டைகளை வழங்கினேன். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் அடையாள அட்டைகள் விரைவில் அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும் முழுவீச்சில் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
சுய உதவிக் குழு மகளிருக்கு வழங்கப்படும் அடையாள அட்டையின் மூலமாக சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான தூரத்திற்கு விலையின்றி கிராம மற்றும் நகர்ப்புற பேருந்துகளில் எடுத்துச் செல்வது உள்ளிட்ட எண்ணற்ற சலுகைகளைப் பெறலாம்.
பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2021-22-ம் ஆண்டு முதல் 2025-26 வரை ரூபாய் 1,274 கோடி நிதி ஒதுக்கீடு வரப்பெற்று 12,045 பணிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய சிறப்பான ஒத்துழைப்புடன் எடுக்கப்பட்டு 9,755 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ஒரு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருக்கு ஒரு நிதியாண்டிற்கு ரூ.3 கோடி வீதம், மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ரூ.702 கோடி ஆண்டொன்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகின்றது.
மாநில அரசே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 3 கோடி ரூபாய் நிதி வழங்குவதால் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை பத்து கோடி ரூபாயாக உயர்த்த வலியுறுத்தி வருகிறோம். எனவே, இதனை ஒன்றிய அரசு 10 கோடி ரூபாயாக உயர்த்திட இந்தக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரை செய்து அனுப்பப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
“ஊட்டச்சத்து குறைபாடில்லாத குழந்தைகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே” நமது முக்கிய நோக்கமாகும்.
- குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்த தமிழ்நாட்டில் செயல்படும் 54 ஆயிரத்து 449 குழந்தைகள் மையங்களில் பயன்பெற்று வரும் 6 மாதம் முதல் 6 வயது வரையிலான சுமார் 22 லட்சம் குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்படுகிறது. மேலும், சுமார் 5.50 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துமாவு வழங்கப்பட்டு தாய்-சேய் ஊட்டச்சத்து நடைமுறை கண்காணிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் இத்திட்டம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
- குழந்தைகள் மையங்களில் 2 முதல் 6 வயதிற்குட்பட்ட சுமார் 10 லட்சத்து 86 ஆயிரம் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் வாரம் மூன்று தினங்களுக்கு முட்டைகளும் 1 முதல் 2 வயது வரையிலான 6 லட்சத்து 75 ஆயிரம்
குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டை வீதம் தாய்மார்கள் மூலம் வீட்டிலேயே வழங்கப்படுகிறது. - அனைத்து குழந்தைகளுக்கும் 2 செட் வண்ணச்சீருடைகளும் நமது அரசு வழங்குகிறது. அனைத்து மையங்களிலும் 100 சதவீதம் குடிநீர், கழி வறைகள், மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- இதுவரை 3,397 குழந்தைகள் நேய மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
- 6,390 குழந்தைகள் மையங்களை திறன்மிகு குழந்தைகள் மையமாக தரம் உயர்த்தி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- மேலும் 5,582 மையங்கள் தரம் உயர்த்த ஆணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- நமது அரசின் முனைப்பான செயல்பாடுகளின் விளைவாக தமிழ்நாடு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5ன்படி 25 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் உயரக் குறைபாடு 11.8 விழுக்காடாக குறைந்துள்ளது.
- 14.6 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் மெலிவுத் தன்மை 3.6 விழுக்காடாக குறைந்து உள்ளது.
- 22 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் எடை குறைவு 5.7 விழுக்காடாக குறைந்துள்ளது.
- குழந்தைகளின் வளர்ச்சி வீதம் பெரும் முன்னேற்றம் அடைந்து உள்ளது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகிறது.
- “ஊட்டச்சத்தை உறுதி செய்” என்ற மகத்தான திட்டத்தின்படி முதற்கட்டமாக 1,07,006 ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 77.3 விழுக்காடு குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர். இத்திட்டம்
வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 15-11-2024 அன்று தொடங்கப்பட்டு 76,705 குழந்தைகளுக்குக் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 6 மாதங்கள் வரையிலான குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு 80.6 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர் என்பது உண்மையிலேயே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. - நம்முடைய அனைத்து திட்டங்களும் கடைக்கோடியில் உள்ள மக்களையும் சென்றடையும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களிலும் மாநில அரசின் பங்குத் தொகை எவ்வித காலதாமதமுமின்றி விடுவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஒன்றிய அரசும் தனது நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்கிட வேண்டும் என இக்குழு மூலமாகவே வலியுறுத்தப் படும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு செயலாளர்கள் தங்களது துறைவாரியான திட்டங்கள் தொடர்பான கருத்துகளை விளக்கினர்.
எம்.பி.க்கள் டி.ஆ. பாலு, தொல். திருமாவளவன், கே. சுப்பராயன், மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன், துரை வைகோ, நவாஸ்கனி ஆகியோர் தங்கள் கருத்து களை தெரிவித்தனர்.
மேலும், எம்.எல்.ஏ.க்கள், தன்னார்வலர்கள், மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (திஷா) குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.