ரூ.1,000 கோடி முதலீட்டில் 1,000 நபர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும்; முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து!!

சென்னை:
ரூ.1,000 கோடி முதலீட்டில் 1,000 நபர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் போரூரில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் இன்று (ஜூலை 7) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 3 முதல் 5 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் கூடுதலாக 1,000 நபர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் அளித்திடும் வகையில், சென்னை போரூரில் உள்ள ஹிட்டாச்சி குழுமத்தைச் சேர்ந்த உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கும், செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தித் திட்டத்தின் விரிவாக்கத்திற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், ஹிட்டாச்சி குழுமம், உலகளாவிய ஃபார்ச்சூன் 500 (Global Fortune) நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் மற்றும் ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இக்குழுமத்தின் துணை நிறுவனங்கள் ஆகும்.

இன்று, முதல்வர் முன்னிலையில், 3 முதல் 5 ஆண்டுகளில், 1000 கோடி ரூபாய் முதலீட்டில், சென்னை போரூரில் உள்ள ஹிட்டாச்சி குழுமத்தைச் சேர்ந்த உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கும், செங்கல்பட்டில் உள்ள ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் உற்பத்தித் திட்டத்தின் விரிவாக்கத்திற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் 1,000 உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் மு.சாய்குமார், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வேணு நுகரி, ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை வளர்ச்சி அலுவலர் கார்த்திக் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *